எக்ஸ் தளத்தின் Grok AI மீது ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி விசாரணை: சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு!

grok

ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ (X) தளத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ‘Grok’, பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களை ஆபாசமான முறையில் மாற்றியமைப்பதாகக் கூறப்படும் பாரிய குற்றச்சாட்டு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுவீடன் நாட்டின் துணைப் பிரதமர் எப்பா புஷ் (Ebba Busch), தானும் இவ்வாறான தரம் தாழ்ந்த ‘டீப்ஃபேக்’ (Deepfake) பாதிப்புக்கு உள்ளானதாகத் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் Grok மென்பொருள் மூலம் சுமார் 30 இலட்சம் பாலியல் ரீதியான புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆயிரக்கணக்கானவை சிறுவர்களுடையவை என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின்’ (Digital Services Act – DSA) கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. Grok தொழில்நுட்பத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை ‘X’ நிறுவனம் முன்கூட்டியே கணித்து, அதைத் தடுக்கச் சரியான நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து ஐரோப்பிய ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

இத்தகைய தவறுகள் தொடர்ந்தால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் ‘X’ தளத்தையே முழுமையாகத் தடை செய்யும் அதிகாரம் ஒன்றியத்திற்கு உண்டு. எனினும், முதற்கட்டமாகப் பாரிய அபராதம் விதிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பூசல்கள் காரணமாக இந்த விசாரணை ஆரம்பத்தில் தாமதமானாலும், தற்போது தனது பிரஜைகளின் பாதுகாப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனிநபர் உரிமைகளை மீறுவோருக்கு எதிராக எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Exit mobile version