இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘கரிநாள்’ அனுஷ்டிக்கப்பட்டு பேரணிகள் நடத்தப்பட்டமைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இனவாதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால், சுதந்திர தினத்தன்று வடக்கு-கிழக்கில் கறுப்புக்கொடி ஏற்றி, கரிநாள் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. இது இனவாதம் தூண்டப்படுவதையே காட்டுகிறது. ஜனாதிபதி தனது பேச்சைச் செயலில் காட்ட வேண்டும் என இந்திக்க அனுருத்த வலியுறுத்தினார்.
ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஷிரந்தி ராஜபக்சவை எப்.சி.ஐ.டி (FCID) க்கும், நாமல் ராஜபக்சவை சி.ஐ.டி (CID) க்கும் அழைத்திருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் வேட்டை என அவர் சாடினார். அரசாங்கம் தனது நிர்வாக இயலாமையை மறைக்கவே ராஜபக்சக்களைக் குறிவைப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
படையினர் உயிர்த்தியாகம் செய்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால்தான் இன்று அனைவரும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடிகிறது. ஆனால், இந்த அரசாங்கம் படையினரின் சேவையை ‘டித்வா’ புயல் பாதுகாப்புடன் மட்டும் மட்டுப்படுத்த முயல்வது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், தேசத்தின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்படும் பிரிவினைவாத மற்றும் இனவாதச் செயற்பாடுகளைத் தடுக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

