இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

image 26ca8f03e9

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று (03) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். முந்தைய அரசாங்கங்களை விட இந்த அரசாங்கம் முற்றிலும் மாறுபட்டது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் மீது தமக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்காத வகையில் அரசாங்கம் சிந்தித்துச் செயற்படுகிறது. இது நாட்டை ஒன்றிணைப்பதற்கான ஒரு நல்ல தொடக்கமாகும்.

இந்த அரசாங்கம் முந்தைய ஆட்சியாளர்களைப் போல ‘உயரடுக்கு’ (Elite) வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல. இவர்கள் கிராமப்புறங்களையும், கீழ் நடுத்தர வர்க்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இதுவே இந்த ஆட்சியின் மிகப்பெரிய பலம்.

ஜனாதிபதி ஒரு சிங்களவராக இருப்பது இனப் பிரச்சினைத் தீர்வுக்குத் தடையல்ல எனக் குறிப்பிட்ட வாசுதேவ, “நாங்கள் இனவெறி எதையும் செய்யப்போவதில்லை” என்று ஜனாதிபதி மிகத் தெளிவாகக் கூறியுள்ளதை வரவேற்றார். எனினும், தீவிர சிங்களப் போக்குடையவர்கள் அல்லது எதிர்ப்புக் குழுக்கள் இந்தச் செயல்பாட்டை எவ்வளவு தூரம் குழப்புவார்கள் என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும் என்றும் அவர் எச்சரித்தார்.

முன்னாள் ஜனாதிபதி குடும்பத்தினர் (ஷிரந்தி, நாமல்) விசாரணைக்கு அழைக்கப்படுவது குறித்துக் கேட்கப்பட்டபோது, தனிப்பட்ட முறையில் அவர்கள் நண்பர்கள் தான். ஆனால், கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டியது அவசியம்; அதை அவர்களால் தவிர்க்க முடியாது.

சி.ஐ.டி (CID) தனது வேலையைச் செய்ய வேண்டும். அதில் நான் தலையிட முடியாது என அவர் பதிலளித்தார்.

அரசாங்கத்தின் குறைபாடுகளைத் தேடுவதை விட, அவர்களின் நேர்மறையான பக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், இதுபோன்ற ஒரு மக்கள் அரசாங்கம் அமையும் எனத் தான் முன்னர் நினைக்கவில்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

 

 

Exit mobile version