இந்தியா தனது அணு ஆயுத பலத்தை நிரூபிக்கும் வகையில், தரை விட்டு தரை பாயும் அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் நேற்று (06) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவு ஏவுதளத்திலிருந்து இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை இணைந்து இந்தச் சோதனையை நடத்தின.
ஏவுகணையின் அனைத்துத் தொழில்நுட்பக் கூறுகளும் திட்டமிட்டபடி துல்லியமாகச் செயற்பட்டதாகவும், அது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைச் சரியாகத் தாக்கியதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
தாக்கும் தூரம்: இந்த ஏவுகணை சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.இது சுமார் 1.5 டன் எடையுள்ள அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே ராணுவத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும், அதன் நம்பகத்தன்மையை (Reliability) அவ்வப்போது உறுதிப்படுத்தும் வழக்கமான பயிற்சியின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இந்தியாவின் அக்னி வரிசை ஏவுகணைகள் நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.