நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களை நேற்று சந்தித்து பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சந்திப்புக்கு நேரம் கேட்டு பல வருடங்களாக ரசிகர்கள் காத்திருந்தனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு நடந்திருப்பது ரசிகர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காலை முதலே விஜய்யின் நீலாங்கரை வீட்டின் முன்பாக ரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். மதியம் 2 மணிக்கு ரசிகர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்தார். பனையூர் அலுவலகத்திற்கு ரசிகர்கள் கூட்டம் வரத்தொடங்கியிருந்தது. குறிப்பாக சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்ட ரசிகர்களை மட்டுமே சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் செய்தி பரவி பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் குவிந்து விட்டனர். இதனால் கூட்டம் கட்டு கடங்காமல் போனது.
மக்கள் இயக்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பிரியாணியின் சுவை பற்றி ஒரு ரசிகர் இணையத்தில் பதிவிட்டு பாராட்டு தெரிவிக்க, அதைத் தொடர்ந்து இணையத்தில் பனையூர் பிரியாணி என்ற ஹேஷ்டேக்குகள் பரவ ஆரம்பித்தது.
முதலில் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களை சந்தித்துப் பேசிய விஜய் அவர்களிடம் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். எதிர்வரும் நாட்களிலும், வாரிசு திரைப்படம் வெளியாகும்போது என்னமாதிரியான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். ரசிகர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஒரு பங்கை மட்டுமே செலவிடுங்கள், தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம், நற்பணிகளை மேற்கொள்ளும் போது ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும், ஏழை எளிய குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
#Cinema
Leave a comment