இசையமைப்பாளர் இளையராஜா தனது அடுத்த சிம்பொனியை எழுத இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், கடந்த மார்ச் 8 ஆம் திகதி லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் ‘வேலியன்ட்’ (Valiant) என்ற தலைப்பில் அவர் பாரம்பரிய சிம்பொனி இசையை அரங்கேற்றினார். உலகின் மிகச் சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் இதை நிகழ்த்தினார். நூற்றுக்கணக்கான கலைஞர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு இசைக் கருவிகளில் வாசித்த இந்த அரங்கேற்றம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.
இந்த நிகழ்வின் மூலம், ஆசிய கண்டத்திலிருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். இதன் மூலம் அவர் மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி போன்ற இசை ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்தார்.
இந்த நிலையில், தனது புதிய இசைப் படைப்புகள் குறித்த அறிவிப்பை இளையராஜா ஒரு காணொளி மூலம் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து, “எனது அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன். அத்துடன், புதிய படைப்பாக ‘சிம்பொனி டான்சர்ஸ்’ (Symphony Dancers) என்ற புதிய இசைக் கோர்வையை எழுத இருக்கிறேன். இதை உங்களுக்குத் தீபாவளி நற்செய்தியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.