பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity Cricket) கலந்து கொண்ட கன்னடத் தொலைக்காட்சி நடிகை ஒருவர், மைதானக் கழிப்பறையில் தன்னை ஒரு நபர் ரகசியமாகப் படம் பிடித்ததாகப் பரபரப்புப் புகாரை அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி 7-ஆம் திகதி போட்டியின் இரண்டாம் நாளில் அவர் கழிப்பறையைப் பயன்படுத்திய போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மறைந்திருந்து இந்தக் காணொளியைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ரகசியக் காணொளி பின்னர் ஒரு மர்மமான இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து நடிகையின் தோழிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக வெளியிட்டு விடுவதாகக் கூறி, அந்த நபர் நடிகையிடம் பெருந்தொகையைப் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் (Blackmail). இந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த நடிகை, உடனடியாக பெங்களூரு சைபர் கிரைம் காவல்துறையினரிடம் தஞ்சம் புகுந்துள்ளார்.
நடிகையின் புகாரைத் தொடர்ந்து, சைபர் கிரைம் காவல்துறையினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மைதானத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கின் ஐபி (IP) முகவரி ஆகியவற்றைக் கொண்டு குற்றவாளியைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் கன்னடத் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.