உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் திரையுலகில் நிலவும் மறைமுகமான “மத ரீதியான பாகுபாடு” (Communal bias) குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
பிபிசி ஆசிய வலையமைப்புக்கு (BBC Asian Network) வழங்கிய நேர்காணலில் அவர், தனக்கு வரவேண்டிய சில பட வாய்ப்புகள் ‘சீன கிசுகிசு’ (Chinese whispers) போலத் திசைதிருப்பப்பட்டு வேறு இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
“இதற்கு மத ரீதியான காரணங்கள் இருக்கலாம், ஆனால் யாரும் அதை நேரடியாக என் முகத்திற்கு முன்னால் சொல்வதில்லை. படைப்பாற்றல் இல்லாத சிலரே இப்போது முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளனர்” என அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஹ்மானின் இந்தக் கருத்துக்கு வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன விசுவ இந்து பரிஷத் (VHP) அமைப்பின் வினோத் பன்சால், ரஹ்மான் நாட்டை அவதூறு செய்வதாகக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் ‘பாதிக்கப்பட்டவர்’ (Victim card) போல நாடகமாடுவதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சர்ச்சை முற்றிய நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “யாரையும் காயப்படுத்துவது எனது நோக்கம் அல்ல, இசையின் மூலம் மக்களை உயர்த்துவதே எனது பணி” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பிரம்மாண்டமாக உருவாகும் ‘இராமாயணம்’ (Ramayana) திரைப்படத்திற்காகப் புகழ்பெற்ற ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பணியாற்றுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியத் திரையுலகில் முஸ்லிம் கதாபாத்திரங்கள் எதிர்மறையாகச் சித்தரிக்கப்படுவதாகத் திரை விமர்சகர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், அமீர் கான், ஷாருக் கான் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர். ரஹ்மானின் கருத்தும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.