ஜனநாயகன் படத்திற்குத் தடை: தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்ற அமர்வு!

deccanherald 2026 01 07 dxnsywhj Jana Nayagan

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்குப் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படத்தின் சில காட்சிகளுக்காகத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து, மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரைத்தது.

இதை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நீதிபதி பி.டி.ஆஷா அவர்கள், “புகார்தாரரின் குற்றச்சாட்டு பிற்போக்குத்தனமானது” எனக் கூறி, படத்திற்கு உடனடியாக ‘U/A’ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்துத் தணிக்கை வாரியம் சார்பில் அவசரமாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவதா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் தயாரிப்பு நிறுவனத்தைக் கடுமையாகச் சாடினர்:

“குறிப்பிட்ட ரிலீஸ் தேதியை நிர்ணயித்துவிட்டு நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவித்தது ஏன்?” என வினவினர்.

சான்றிதழ் பெறுவதற்குப் பல்வேறு நடைமுறைகள் இருக்கும்போது, தயாரிப்பு நிறுவனம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். தனி நீதிபதி பி.டி.ஆஷா வழங்கிய உத்தரவிற்குத் தடை விதித்த நீதிபதிகள், வழக்கை வரும் ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தனி நீதிபதியின் தீர்ப்பால் படம் நாளை வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, தற்போதைய உயர்நீதிமன்ற அமர்வின் தடை பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதோடு, பொங்கல் ரிலீஸும் கேள்விக்குறியாகியுள்ளது.

 

 

Exit mobile version