தளபதி விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதில் இடம்பெற்றுள்ள ஒரு தொழில்நுட்பத் தவறு தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
ட்ரெய்லரின் தொடக்கத்தில் ஒரு நபர் துப்பாக்கியை ஏந்தியிருக்கும் காட்சியில், கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ஜெமினி (Google Gemini AI) சின்னம் (Logo) இடம்பெற்றிருப்பதை இரசிகர்கள் மிக நுணுக்கமாகக் கவனித்துக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தத் தவறு சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படத் தொடங்கியவுடன், படக்குழுவினர் உடனடியாக அந்தச் சின்னத்தை டிஜிட்டல் முறையில் நீக்கிவிட்டு, புதிய ட்ரெய்லரை அப்டேட் செய்தனர்.
படக்குழுவினர் விரைவாகச் செயல்பட்ட போதிலும், அதற்குள் நெட்டிசன்கள் அந்தப் பகுதியைத் திரைப் பதிவு (Screen Record) செய்து வைரலாக்கியுள்ளனர்.
“சினிமாவில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தப்பில்லை, ஆனால் ஒரு காட்சியை முழுமையாக எடிட் செய்யாமல், நிறுவனத்தின் லோகோ தெரியுமளவுக்கு வெளியிட்டது சினிமா கலைக்கே அவமானம்” எனச் சிலர் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.
அதேவேளை, இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு விளம்பர உத்தியா அல்லது கவனக்குறைவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய்யின் கடைசித் திரைப்படம் எனக் கருதப்படும் ‘ஜன நாயகன்’, முழுக்க முழுக்க அரசியல் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளைக் கொண்ட படமாக இருக்கும் என்பதை இந்த ட்ரெய்லர் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.