கடந்த 2024 ஆம் ஆண்டு ‘புஷ்பா-2’ திரைப்பட விளம்பர நிகழ்வின் போது நிகழ்ந்த நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட 23 பேர் மீது சிக்கடப்பள்ளி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத் ஆர்.டி.சி எக்ஸ் ரோட்டில் உள்ள சந்தியா தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வருகை தந்தபோது, அங்கு திரண்ட ரசிகர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீ தேஜ் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் 11-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மேலாளர், ஊழியர்கள் மற்றும் 8 பவுன்சர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது வருகையை முன்கூட்டியே முறைப்படி தெரிவிக்காதது மற்றும் அவரது பாதுகாவலர்கள் (Bouncers) ரசிகர்களைத் தள்ளி நெரிசலை ஏற்படுத்தியதே அல்லு அர்ஜுன் மீதான முக்கிய குற்றச்சாட்டுகளாகும்.
ஒரு பெரிய நடிகர் வரும்போது அவசர கால வெளியேறும் வழிகளைத் திறந்து வைக்காதது மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததற்காகச் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனிப்பட்ட முறையில் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குனர் சுகுமார் இணைந்து மற்றுமொரு 1 கோடி ரூபாயை வழங்கினர். காயமடைந்த சிறுவனின் மருத்துவச் செலவுகளையும் அல்லு அர்ஜுன் ஏற்றுக்கொண்டார்.
தற்போது இந்த வழக்கு நம்பள்ளி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அல்லு அர்ஜுன் 11-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பெரிய அளவில் சட்ட ரீதியான பாதிப்புகள் இருக்காது எனச் சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.