பொலிவுட் முன்னணி நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து பெறப் போவதாகத் தொடர்ந்து வெளியாகும் வதந்திகள் குறித்து நடிகர் அபிஷேக் பச்சன் மனம் திறந்து பேசியுள்ளார். இந்த வதந்திகள் உண்மையல்ல என்றாலும், இது தன் மகள் ஆராத்யாவை பாதிக்குமோ என தான் கவலைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அபிஷேக் பச்சன் இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், வதந்திகளால் தான் மனம் வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“விவாகரத்து வதந்திகள் உண்மையில்லை என்றாலும், ஏன் இப்படிப் பரவுகின்றன? என்று நினைத்து மனம் வருத்தம் கொள்கிறது. சமூக ஊடகங்களில் இருந்தாலும், தேவையற்ற விடயங்களை நான் பொருட்படுத்த மாட்டேன். இருப்பினும், என் மகளைப் பற்றி கவலையாக இருக்கிறது.”
வதந்திகளைக் கையாளும் தனது மகள் ஆராத்யாவின் அணுகுமுறை குறித்து அபிஷேக் பச்சன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
“என் மகளைப் பொறுத்தவரை, பகுத்தறிவதில் கெட்டிக்காரர். பார்க்கும் எதையும், கேட்கும் எதையும் நம்பமாட்டார்.
ஆதாரமற்ற விஷயங்களை, வதந்திகளை நம்பக்கூடாது என்று என் மகளுக்கு ஐஸ்வர்யா ராய் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது எனக்கு ஆறுதலாக இருக்கிறது.”
அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற 14 வயது மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.