சினிமா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழம்பெரும் கவர்ச்சி நடிகை! நேரில் சந்தித்த அமைச்சர்கள்


பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜெய்குமாரி (வயது 72). 1966-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி திரைப்படத்தில் வில்லன் நடிகர் நம்பியாருக்கு கண் தெரியாத தங்கையாக நடித்து திரை உலகில் அறிமுகம் ஆகினார்.
இவர் சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு நங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஜெய்குமாரிக்கு 2 சிறுநீரகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதுடன் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால், சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாத காரணத்தால் ஜெய்குமாரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேராமல் சமாளித்து வந்துள்ளார்.
வயிற்றுவலி அதிகமானதால், சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், நடிகை ஜெயக்குமாரியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நேற்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அவருக்கு வீடு மற்றும் உதவித்தொகை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். மேலும் ஜெயக்குமாரிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்துள்ளார்.
இவரின் சிகிச்சைக்கு உதவ முன்வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.