புலி படத்திற்காகப் பெற்ற வருமானத்தை முறையாகக் கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் நாளை (பெப்ரவரி 07) வழங்கவுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு விஜய் நடித்த புலி திரைப்படம் வெளியான சமயத்தில், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடிச் சோதனை நடத்தியது.இந்தச் சோதனையின் போது, அப்படத்திற்காக அவர் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை முறையாகக் கணக்கில் காட்டவில்லை எனக் கண்டறியப்பட்டது.
வருமானத்தை மறைத்ததற்காக, இந்திய மதிப்பில் ரூ.1.50 கோடியை அபராதமாகச் செலுத்துமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டது.
வருமான வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து, கடந்த 2022-ஆம் ஆண்டு நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், குறிப்பிட்ட வருமானத்திற்கு ஏற்கனவே வரி செலுத்தப்பட்டதாகவும், அபராதம் விதித்தது சட்டவிரோதமானது என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால், திரையுலக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.