அரசியல்

29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.தே.க. கையில் நாடு

Published

on

சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.தே.க. உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று (21) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதற்கான நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் 1978 இல்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் பிரதமர் ஆட்சி (வெஸ்ட்மினிஸ்டர்) முறைமையே இருந்தது.

1982 இல் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளர் ஜே.ஆர். ஜயவர்தன வெற்றிபெற்றார்.

1988 இல் நடைபெற்ற 2 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளர் ரணசிங்க பிரேமதாச வெற்றிபெற்று, 2 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1993 இல் பிரேமதாச கொல்லப்பட்ட பின்னர், ஐ.தே.க. ஆட்சியில் பிரதமராக இருந்த டிபி விஜேதுங்க, நாடாளுமன்றம் ஊடாக – வாக்கெடுப்பின்றி, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். அவர் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்.

அதன்பின்னர் 1994, 1999, 2005, 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர்களே வெற்றிபெற்றனர்.

ஐ.தே.கவின் ஆசியுடன் 2015 இல் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். எனினும், அவர் ஐ.தே.கவின் அங்கத்துவத்தை பெறவில்லை. சுதந்திரக்கட்சி உறுப்பினராகவே செயற்பட்டார்.

2019 இல் மொட்டு கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார். 2005 இற்கு பிறகே 2019 இல்தான் ஐ.தே.க. வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் (சஜித்).

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதால், நாடாளுமன்றம் ஊடாக 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு 134 எம்.பிக்களின் ஆதரவு கிட்டியது. சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.தே.க. உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version