22 வது யாப்பு வந்தால் இலங்கை படு பாதாளத்திற்குள் தள்ளப்படும்!!
இலங்கையில் நடைமுறையில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கி இலங்கையின் அரசியல் யாப்பில் 22ஆவது யாப்பு அதற்கு மாற்றீடாக கொண்டு வர இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (25.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.இலங்கையில் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகின்ற 13 வது திருத்தச்சட்டத்தை முற்று முழுதாக நீக்கி இலங்கையின் அரசியல் யாப்பில் 22ஆவது யாப்பை புதிய சட்டமாக கொண்டு வர இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியிருக்கிறார்.
அப்படி ஒரு என்னப்பாட்டுக்கு அவர்கள் வருவார்களாக இருந்தால் அது முற்று முழுதாக இலங்கையை படு பாதாளத்திற்கு தள்ளப்படுகின்ற ஒரு நிலமையாகத் தான் இருக்கும். தமிழர்கள் இயக்கர்கள், நாகர்களாக இலங்கையினுடைய தேசிய இனமாக பூர்வீக குடிகளாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு உரித்து இருக்கிறது. வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்களினுடைய எண்ணக் கருக்களுக்கு அமைவாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவோ, கருத்துக் கணிப்பு ஊடாகவும் அவர்கள் விரும்புகிற ஆட்சி முறையில் இருக்கும் உரித்து அவர்களுக்கு இருக்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது கூட முற்று முழுதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எங்களைப் பொறுத்த வரையில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறை முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.
ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் போது அது தமிழர்களுக்கு தீர்வாக அமையாது.
ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வின் கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு,அவரது கருத்தை எதிர்க்கிறேன்.என சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் இந்திய விஜயம் அதன் பின்னணி, குருந்தூர் மலை விவகாரம் குறித்தும் இதன்போது அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment