உள்ளகக் கடன்மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும், முன்மொழியப்படும் கடன் மறுசீரமைப்புச் செயன்முறை குறித்த இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படும்வரை காத்திருக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும், சம்பந்தப்பட்ட ஏனைய சகல தரப்புக்களிடமும் இலங்கை வர்த்தகப்பேரவை வேண்டுகோள்விடுத்துள்ளது.
இவ்வார இறுதியில் கடன்மறுசீரமைப்பு செயன்முறை குறித்த யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில், இதுகுறித்து இலங்கை வர்த்தகப்பேரவையினால் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் மீது நம்பிக்கை வைப்பதும், பொறுமையைக் கடைப்பிடிப்பதும் அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம். இலங்கை மத்திய வங்கியினால் கூறப்பட்டவாறு நிதியியல் முறைமை உறுதிப்பாட்டைப் பேணுவதிலும், பணத்தை வைப்புச்செய்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதிலுமே விசேட கவனம் செலுத்தப்படவேண்டும்.
அதேவேளை கடன்மறுசீரமைப்பு தொடர்பில் முன்மொழியப்படும் செயற்திட்டத்தை ஆரோக்கியமான கலந்துரையாடல்களின் அடிப்படையில் முழுமையாக ஆராய்வதற்கு நாமனைவரும் கூட்டிணைந்து இடமளிப்பது இன்றியமையாததாகும். அதனூடாக மாத்திரமே அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைந்துகொள்ளமுடியும்.
எனவே பொறுப்புணர்வுடன் செயற்படும் அதேவேளை, முன்மொழியப்படும் கடன் மறுசீரமைப்புச் செயன்முறை குறித்த இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படும்வரை காத்திருக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும், சம்பந்தப்பட்ட ஏனைய சகல தரப்புக்களிடமும் வலியுறுத்திக்கேட்டுக்கௌ;கின்றோம். இது கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான ஒட்டுமொத்த செயற்திட்டத்தின் மிகமுக்கிய படிமுறை என்பதுடன், அதனுடன் தொடர்புடைய ஏனைய முக்கிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு உதவும்.
இலங்கையின் உள்ளகக் கடன்களை மறுசீரமைப்புச் செய்வதற்கான உத்தேசம் குறித்து அரசாங்கம் அறிவித்ததிலிருந்து இதுபற்றிய பல்வேறு கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன. நாம் இக்கரிசனைகளைப் புரிந்துகொள்வதுடன் இதுபற்றிய வெளிப்படைத்தன்மைவாய்ந்த கலந்துரையாடலுக்கான உரிமையையும் ஏற்றுக்கொள்கின்றோம். இருப்பினும் கடன்மறுசீரமைப்புடன் தொடர்புடைய சந்தையின் துலங்கல்கள் குறித்து நாம் அவதானத்துடன் இருக்கும் அதேவேளை, இதுபற்றிய தவறான தகவல்கள் பகிரப்படுவதையும் நிறுத்தவேண்டும். ஆகவே நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு இதில் தொடர்புபட்டிருக்கும் அனைத்துத்தரப்பினரும் உரியவாறு செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment