இலங்கை
நுவரெலியாவில் சுற்றுலாவிகள் சுகாதார நடைமுறைகளில் அலட்சியம்!!
நுவரெலியாவிற்கு கடந்த நீண்ட வார இறுதியில் அதிகளவான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலியா சுற்றுலாப் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்தார்.
அதில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பதிவுசெய்யப்பட்டு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுவரெலியாவில் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர்கள் சங்கம் தங்குமிட வசதிகளை சுகாதார வழி வழிகாட்டல்களுக்கு அமைய வழங்குகின்றனர்.
ஆனால் பதிவுசெய்யப்படாத தங்குமிடங்களுக்கு வரும் உல்லாச பயணிகள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதில்லை என அவர் தெரிவித்தார்.
நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும், இது தொடர்பில் சுகாதாரத் துறை மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்தார்.
நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி வேடிக்கை பார்க்க வேண்டுமென நுவரெலியா கிராண்ட் ஹோட்டலின் உதவி முகாமையாளர் ஹிரன் கொடித்துவக்கு தெரிவித்தார்.
நீண்ட வார இறுதியில் நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது நடந்துகொள்வதை காணக்கூடியதாகவிருந்தாக அப்பகுதி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
You must be logged in to post a comment Login