இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்குமாறு, வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சங்கானை கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற சுதேச சித்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது நாட்டின் கடல் எல்லைக்குள் உட்புகுந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் எமது நாட்டின் கடல் வளங்கள் அருகி வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் எமது நாட்டு மீனவர்களின் தொழில் முதல்கள் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளில் சிக்குண்டு சேதமடைகின்றன. இதனால் இலங்கை மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் இதுவரை எமது மீனவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மீனவர்கள் தொழிலை கைவிடும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினை இன்று நேற்று மட்டும் இடம்பெறவில்லை, அன்று தொடக்கம் இன்றுவரை இடம்பெற்று வருகின்றது. இந்திய இழுவைப் படகுகளால் அதிகம் பாதிக்கப்படுவது நமது வடபகுதி மீனவர்களே.
தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதால் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் ஒரு நல்லெண்ணம் ஏற்பட வாய்ப்புகள் கிடையாது.
எனவே இதனை தடுப்பதற்கு தாங்கள் தங்களாலான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும் என தங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் – என்றார்.
#SrilankaNews
Leave a comment