முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு , உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகள் அடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும், தீர்ப்பை அறிவித்த பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள், குறித்த குற்றச்சாட்டுகளில் பூஜித் ஜயசுந்தரவை குற்றவாளியாகத் தீர்மானிப்பதாகத் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பை அறிவித்த நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற அமர்வின் தலைமை நீதிபதி பிரியந்த லியனகே, “உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்னரே புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கடமையைப் புறக்கணித்ததன் காரணமாக 268 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 586 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் அவருக்கு குடிமக்களைப் பாதுகாக்கும் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி மாலையில், அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல் இந்த பிரதிவாதிக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனாலும், அந்த நிலைமையைத் தடுப்பதற்கு அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றங்களைத் தடுப்பதற்காக அரசினால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்ற ரீதியில் அவர் தனது பொறுப்புகளைத் தவறவிட்டுள்ளார்” எனக் குறிப்பிட்ட பெரும்பான்மை நீதிபதிகள் அமர்வு, பிரதிவாதி செய்துள்ள குற்றத்தின் தன்மையைக் கருத்திற் கொண்டு அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகத் அறிவித்துள்ளது.
சிறுபான்மைத் தீர்ப்பை அறிவித்த நீதிபதி விராஜ் வீரசூரிய, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும், அதற்கமைய அவரை விடுவித்து விடுதலை செய்வதாகவும் அறிவித்தார்.