குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11) முத்திரையிடப்பட்ட லங்கா நிலக்கரி நிறுவனத்தின் கொஹுவளை அலுவலகம் இன்று (ஏப்ரல் 15) மீண்டும் திறக்கப்பட உள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திகா சனத் குமனாயக்க கடந்த சனிக்கிழமை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 465 நிலக்கரி கப்பல் தொகுதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது. இதில் 452 கப்பல் தொகுதிகள் முந்தைய அரசாங்கங்களின் காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டதும், விசாரணைக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினித் தரவுகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சேகரிக்க உள்ளனர். குறிப்பாக தரம் குறைந்த நிலக்கரி விநியோகம் மற்றும் அதனால் ஏற்பட்ட சுமார் 2.24 பில்லியன் ரூபா நட்டம் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த ஆவணச் சேகரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், நிறுவனத்தின் வழமையான செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றும் விரைவில் நியமிக்கப்படவுள்ளது. எத்தகைய அரசியல் தலையீடுகளுமின்றி கடந்த கால முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாகவே கொஹுவளை அலுவலகத்தில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.