08 5
செய்திகள்அரசியல்இலங்கை

ஈரானியக் கப்பல் பணியாளர்களைப் பாதுகாப்பாக மீட்டது இலங்கை: திருகோணமலைக்கு மாற்றப்படவுள்ள ‘IRIS Bushehr’

Share

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள 208 பணியாளர்களைப் பாதுகாப்பாகத் தரையிறக்கி, அவர்களை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ளது. இது குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (05) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பணியாளர்களைத் தரையிறக்கிய பின்னர், குறித்த கப்பலை பாதுகாப்பான முறையில் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தக் கப்பல் தனது இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கையின் கடற்பரப்பில் உதவி கோரியிருந்த நிலையில், சர்வதேச கடல்சார் உடன்படிக்கைகளுக்கு அமையவும், மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக ஜனாதிபதி விளக்கமளித்தார். கொழும்பு துறைமுகம் இலங்கையின் பிரதான வர்த்தக மையமாக இருப்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் வர்த்தக நடவடிக்கைகளைப் பாதிக்காத வண்ணம், கப்பலைத் திருகோணமலைத் துறைமுகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள 208 பணியாளர்களும் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

சர்வதேச அளவில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் தற்போதைய பதற்றமான சூழலில், இலங்கை ஒரு நடுநிலையான நாடாகவே செயற்படுகிறது என்பதை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தினார். “ஒரு நாடு என்ற ரீதியில் நடுநிலைமையைப் பாதுகாத்து, மனிதநேயத்திற்கு முதலிடம் கொடுத்துச் செயற்பட ஒருபோதும் தயங்கப்போவதில்லை,” என்று அவர் குறிப்பிட்டார். எந்தவொரு வெளிநாட்டின் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், நாட்டின் இறைமையையும் சர்வதேசக் கடமைகளையும் கருத்தில் கொண்டே இந்த மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரிகள் மற்றும் அரச ஊடகங்கள் மூலம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ தகவல்களை மாத்திரம் பின்பற்றுமாறும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். இக்கப்பலில் உள்ள பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழலில் தேவையற்ற வதந்திகளைத் தவிர்த்து நாட்டின் அமைதியைக் பேண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...