தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மணமக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாளை (26) நடைபெறவுள்ள இவர்களது பிரம்மாண்ட திருமணத்திற்குப் பிரதமருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குடும்பத்தினருக்குத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ள பிரதமர், இது ஒரு மங்களகரமான மற்றும் மகிழ்ச்சியான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார். “விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகிய இருவருக்குமே சினிமா திரைக்கதைகள் புதியதல்ல. ஆனால், அன்பும் பாசமும் நிறைந்த இந்த நிஜ வாழ்க்கை, அவர்கள் வெள்ளித்திரையில் உருவாக்கிய மாயாஜாலத்தை விட நிச்சயம் மிளிரும்” எனப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் இந்த ஜோடி ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என அவர் தனது கடிதத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்து திருமணச் சடங்கின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் ‘சக சப்தபத பவா’ (ஏழு அடிகள் ஒன்றாக நடத்தல்) என்ற தத்துவத்தைக் குறிப்பிட்டு, இந்தத் தம்பதியினர் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாகவும், துணையாகவும் திகழ வேண்டும் எனப் பிரதமர் நெகிழ்ச்சியுடன் ஆசி வழங்கியுள்ளார். நீண்டகாலமாக நிலவி வந்த இவர்களது காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமையவுள்ள இந்தத் திருமணத்திற்கு, சினிமா பிரபலங்கள் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.