நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட வழக்கறிஞர் பிரியந்த ஜெயதுங்க என்பவருக்கு உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பினை வழங்கியுள்ளது. நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, அச்சலா வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
குறித்த வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காகத் தான் முன்னிலையான போது, அங்கிருந்த மூன்று நீதியரசர்கள் உண்மையை மறைத்துத் தனக்கு எதிராகத் தீங்கிழைக்கும் வகையில் செயற்பட்டதாகத் தேவையற்ற அறிக்கைகளை வெளியிட்டார். மேலும், அந்த நீதியரசர்கள் தண்டனைச் சட்டக்கோவையின் 289-வது பிரிவின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்தச் செயல் நீதிமன்றத்தின் கௌரவத்தைச் சீர்குலைப்பதாகக் கருதி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதியரசர்கள் அமர்வு, பிரதிவாதியான பிரியந்த ஜெயதுங்கவை அவமதிப்புக் குற்றவாளியாக உறுதி செய்ததுடன், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே, தற்போதைய தீர்ப்பின் பிரகாரம் அவரது தண்டனைக் காலம் அந்தத் திகதியிலிருந்து கணக்கிடப்பட்டுத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.