ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பாடசாலை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க இது குறித்துக் கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் ஒருவரின் உடல்நிலை இன்று மிக மோசமடைந்ததால், அவர் அவசர சிகிச்சைக்காகத் தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை, ஆசிரியர் சேவையில் (Teacher Service) உள்வாங்கி நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆரம்பத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அடையாளச் சத்தியாக்கிரகப் போராட்டமாகத் தொடங்கிய இந்த நடவடிக்கை, அரசாங்கத்திடமிருந்து முறையான தீர்வு கிடைக்காத காரணத்தினால் தற்போது சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடைந்துள்ளது.
தங்கள் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஏனைய உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.