அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக, அந்நாட்டின் விமானப் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர்காற்று காரணமாக வார இறுதி நாட்களில் விமானப் போக்குவரத்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,400-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 6,000-க்கும் அதிகமான விமானங்கள் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டல்லாஸ் (Texas) மற்றும் அட்லாண்டா (Georgia) போன்ற முக்கிய விமான நிலையங்கள் அதிகப்படியான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
ஈஸ்ட் டெக்சாஸ் முதல் நார்த் கரோலினா வரை சுமார் 3,200 கிலோமீட்டர் தூரத்திற்கு உறைபனி மற்றும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னெசோடா மற்றும் டகோடாஸ் பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்ஸியஸ் வரை சரிந்துள்ளதால், மக்கள் வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது சுமார் 1 இன்ச் தடிமனுக்கு பனி படர்ந்துள்ளதால் மின்சாரத் தடையும் ஏற்பட்டுள்ளது.
டெக்சாஸ், நியூயோர்க், ஜார்ஜியா மற்றும் வர்ஜீனியா உட்பட மொத்தம் 18 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 14 கோடி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைகள் இன்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என ஆளுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.