ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாச்சி (Sanae Takaichi), பதவியேற்ற மூன்றே மாதங்களில் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, புதிய பொதுத்தேர்தலுக்கு இன்று (23) உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
ஜப்பானிய நாடாளுமன்றத்தின் சக்திவாய்ந்த கீழ் சபையை (House of Representatives) கலைப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானம் இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கலைப்பு கடிதத்தை வாசித்தபோது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கைகளை உயர்த்தி, ஜப்பானியர்களின் பாரம்பரியமான “பான்சாய்” (Banzai – பல்லாண்டு வாழ்க) என்ற கோஷத்தை எழுப்பி இதனை வரவேற்றனர்.
சாதாரண நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமான முதல் நாளிலேயே சபையைக் கலைப்பது ஜப்பானிய வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
ஜனவரி 27 முதல் உத்தியோகபூர்வ பிரசாரங்கள் ஆரம்பமாகவுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 08-ஆம் திகதி ஜப்பான் மக்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கவுள்ளனர்.
கடந்த 2025 அக்டோபர் மாதம் பிரதமராகப் பதவியேற்ற சனே தகாச்சி, தற்போது தமக்குக் கிடைத்துள்ள 70 – 90 சதவீத மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் தனது தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (LDP) பலத்தை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். பணவீக்கம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மக்கள் ஆதரவைப் பெறுவதே அவரது இலக்காகும்.
இருப்பினும், கடும் பனிப்பொழிவு நிலவும் பெப்ரவரி மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.