தோட்டத் தொழிலாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆராயும் தொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் கவனத்திற்குப் பின்வரும் விடயங்களைக் கொண்டு வந்தார்.
இம்மாதம் அறிவிக்கப்பட்டுள்ள 400 ரூபாய் சம்பள உயர்வு (அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது) அரச பெருந்தோட்ட நிறுவனங்கள், 22 தனியார் நிறுவனங்கள், சிறு தோட்ட உடைமையாளர்கள் மற்றும் தனியார் சிறு தோட்டங்கள் ஆகிய நான்கு பிரிவுகளிலும் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தடையின்றிக் கிடைக்க வேண்டும்.
“வரவு செலவுத் திட்டத்தின் போது இந்தச் சம்பள உயர்வை முன்னிறுத்தியே நாம் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்,” என அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் உரையாற்றுகையில், தோட்ட நிறுவனங்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்தார்:
சம்பள உயர்வு வழங்கப்படுவதைக் காரணம் காட்டி, தொழிலாளர்கள் பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை (நிறை) நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
வழக்கத்தை விட அதிக அளவில் கொழுந்து பறிக்காவிட்டால் முழு நாள் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என நிறுவனங்கள் தொழிலாளர்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளன.இந்த நிலை தொடர்ந்தால் அரசாங்கம் அறிவித்த 400 ரூபாய் உயர்வு தொழிலாளர்களைச் சென்றடையாது என்பதால், இதில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், கலைசெல்வி உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டு மலையக மக்களின் தற்போதைய வாழ்வாதாரப் போராட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.