இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்த முக்கிய விடயங்கள்.
கல்வி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிறுவனமும் தங்களிடம் உள்ள அதிகாரத்தை எதேச்சதிகாரமான முறையில் பயன்படுத்த முடியாது. அனைத்து நடவடிக்கைகளும் முறையான நடைமுறைகளின்படியே அமைய வேண்டும்.
சிறுவர்கள் தொடர்பான விடயங்களில் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை அரசாங்க நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். குறித்த பாடசாலை நிகழ்வில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? அதன் மூலம் ஏதேனும் ஒரு மாணவர் அநீதிக்குள்ளாகியுள்ளாரா? என்பது குறித்து ஆணைக்குழு ஆராயும்.
உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகள் மட்டுமன்றி, மாணவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்க்காமை மற்றும் வாய்ப்புகளை மறுப்பதும் ஒருவகைத் துஷ்பிரயோகமே என அவர் சுட்டிக்காட்டினார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளமை கவலைக்குரியது.
இவ்வாறான அநீதிகளுக்கு அல்லது பாதிப்புகளுக்கு உள்ளாகும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அல்லது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த விசாரணையின் முடிவில் தகுந்த பரிந்துரைகள் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.