இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் அபாயகரமான அளவில் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன இது குறித்துத் தெரிவிக்கையில் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 150 முதல் 200 வரை அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமற்ற ஒரு நிலையாகும். எல்லை கடந்த காற்று இயக்கம் (Transboundary air pollution) மற்றும் தற்போது நிலவும் வடகிழக்கு பருவமழை கால நிலை மாற்றங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
காற்றின் தரம் குறைந்துள்ளதால் சுவாசம் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் உடல்நலப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அசௌகரியங்கள் அல்லது சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுமாயின், உடனடியாகத் தாமதிக்காமல் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.