நாட்டிற்குப் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கான விலைமனுக்கோரல் செயல்பாட்டில் தலையிட்டு, ரூ. 800 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார். அவரை விரைவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) இன்று கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் சாட்சியங்களைச் சமர்ப்பித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க. முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவுக்கு எதிரான புகாரை CIABOC முன்வைத்த போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அர்ஜுன ரணதுங்க வெளிநாட்டில் இருப்பதால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை என்று CIABOC நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதல் சந்தேக நபரான தம்மிக்க ரணதுங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் சாலிய பீரிஸ், விசாரணைகளுக்கு உதவி செய்யும் தமது கட்சிக்காரரை பிணைச் சட்டத்தின்படி விடுவிக்குமாறு கோரினார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த தலைமை நீதவான் தம்மிக்க ரணதுங்கவை தலா ரூ. 1 மில்லியன் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சாட்சிகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது என அவரை கடுமையாக எச்சரித்தார். சந்தேக நபர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்பதால், அவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.