‘காதல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி நட்சத்திரமாக ஜொலித்த நடிகை சந்தியா, திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ‘காதல்’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், சந்தியாவையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
‘டிஸ்யூம்’, ‘வல்லவன்’ உட்படப் பல தமிழ்ப் படங்களில் நடித்த சந்தியா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்தார்.
சந்தியா கடந்த 2015ஆம் ஆண்டு சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் சந்திரசேகரன் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதிகளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனர்.
திருமணத்திற்குப் பின் சினிமாவிலிருந்து விலகியிருந்த சந்தியா, தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார்.
முதற்கட்டமாக, ஒரு வெப் தொடர் ஒன்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் ‘காதல்’ சந்தியா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தத் தொடரில் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, பாடினி குமார் உள்படப் பலர் நடிக்கின்றனர்.
மேலும், இந்த வெப் தொடரைத் தொடர்ந்து, ஒரு புதிய தமிழ்ப் படத்தில் ‘காதல்’ சந்தியாவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.