நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக அடைய முடியாத பகுதிகளுக்குப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை வர்த்தகம், வர்த்தகத்துறை, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலைமை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் தட்டுப்பாடு இல்லாமல் நுகர்வோருக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலானது அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்திற்கும் வர்த்தகம், வர்த்தகத்துறை, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கும் இடையில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் பின்வரும் தேவைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது:
நிவாரணத்திற்காக உணவுப் பொருட்களை வழங்குதல். சுற்றுலாத் துறைக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குதல். நுகர்வோருக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல் நியாயமான விலையில் இந்த உணவுப் பொருட்களை வழங்குவதற்கான செயல்முறை.
இதன் மூலம், பேரிடருக்குப் பின்னரான காலத்திலும் உணவு விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகிறது.