முல்லைத்தீவு முத்தயன்கட்டு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாய நிலங்களில் சிக்கித் தவித்த ஏழு விவசாயிகளும், சிறுவன் ஒருவனும் இன்று (டிசம்பர் 1) பத்திரமாக மீட்கப்பட்டனர்.
‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கனமழையிலிருந்து தங்கள் விவசாய நிலங்களைக் காப்பாற்றச் சென்ற இந்தக் குழுவினர், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவின் குமுளமுனை, நீத்தகாய் மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாகச் சிக்கியிருந்துள்ளனர்.
தொலைபேசி சமிக்ஞைகள் தடைபட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளால் நிவாரணப் பணியாளர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, விவசாயிகளின் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்து உதவி கோரியுள்ளனர்.
வெள்ளம் காரணமாக நிவாரணப் பணியாளர்களும் வர முடியாத நிலையில், இளைஞர்கள் முல்லைத்தீவு வேளாங்கண்ணி கடற்றொழில் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர். உடனடியாகப் படகுகளைப் பயன்படுத்தி விவசாயிகளைத் தேடும் நடவடிக்கையைச் சங்க உறுப்பினர்களும் இளைஞர்களும் இணைந்து ஆரம்பித்தனர்.
கடற்றொழில் படகுகள் விவசாய நிலங்களைத் தேடிச் சென்றபோது, சிக்கியிருந்த ஏழு மீனவர்களும் அவர்களுடன் இருந்த 14 வயது சிறுவனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.