செய்திகள்
அமெரிக்காவில் மீண்டும் வெளிநாட்டு பயணிகள்!
அமெரிக்கா 20 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வெளிநாட்டு பயணிகளை தன்னாட்டுக்கு வர அனுமதியளித்துள்ளது.
அமெரிக்கா 20 மாதங்களுக்கு பிறகு தனது எல்லைகளை திறந்துள்ள நிலையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளை தன் நாட்டுக்குள் அனுமதிக்க முடியுமென தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.
கொரோனா வைரசின் முதல் அலையின்போது அமெரிக்கா கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.
இவ் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பங்குனி மாதம் தனது தரை வழி எல்லைகளை மூடிய அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் இதர பயணிகள் வருவதற்கும் தடை விதித்தது.
அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் விதித்த இந்த தடையை அவருக்கு பின் கடந்த தைமாதத்தில் பதவிக்கு வந்த ஜோ பைடன் மேலும் நீடித்தார்.
இதனால் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பயணத் தடை குடும்பங்களை பிரித்து, சுற்றுலாவை முடக்கியது.
இந்தநிலையில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு, முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சர்வதேச பயணிகள் கார்த்திகை மாதம் 8-ந்தேதி முதல் அமெரிக்கா வரலாம் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக சர்வதேச பயணிகளுக்கான புதிய பயண கொள்கையையும் ஜோ பைடன் நிர்வாகம் அண்மையில் வெளியிட்டது.
அதன்படி அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனாதொற்று இல்லை எனும் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் 20 மாதங்களுக்கு பிறகு அமெரிக்கா நேற்று தனது எல்லைகளை திறந்து சர்வதேச பயணிகளை நாட்டில் நுழைய அனுமதித்தது. முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிக அளவில் படையெடுப்பார்கள் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
You must be logged in to post a comment Login