அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவில் அரசு சார்பில் ஒலிபரப்பப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய விளம்பரத்தைக் காரணம் காட்டி, கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, உலக நாடுகளிடம் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்குப் பரஸ்பர வரி விதித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்டை நாடான கனடாவிலிருந்து அமெரிக்கா 75 சதவீதம் அளவிலான பொருட்களைக் கொள்முதல் செய்த போதிலும், அதைக் குறைக்கும் நோக்கில் கனடாவின் மீது டிரம்ப் நிர்வாகம் 25 சதவீதம் வரி விதித்தது.
அத்துடன், பெண்டானில் இரசாயனத்தை சீனா, ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்ததற்காக மேலும் 10 சதவீதம் அதிகரித்து, 35 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டது.
கனடாவின் புகழ்பெற்ற ஒன்ராறியோ மாகாண ஆளுநர் டோக் போர்ட் (Doug Ford) அனுமதியுடன், சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்று அங்குள்ள தொலைக்காட்சிகளில் அரசு சார்பில் ஒலிபரப்பப்பட்டது.
அந்த விளம்பரத்தில் டிரம்புக்கு எதிரான கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தன. மேலும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின், ‘வரிவிதிப்புகள் வர்த்தகப் போருக்கு வித்திட்டுப் பொருளாதாரப் பேரழிவை உண்டாக்கும்’ என்ற பிரபல வரிகளும் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த விளம்பரம் டிரம்ப் நிர்வாகத்திற்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
விளம்பரம் குறித்துக் கனடா பிரதமர் மார்க் கார்னி டிரம்ப்பிடம் தொலைபேசியில் பேசியதுடன், இதுகுறித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, விளம்பர ஒலிபரப்புக்குத் தடை விதிப்பதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “கனடா எனக்கு மிகவும் பிடிக்கும். மார்க் கார்னி என்னுடைய நல்ல நண்பர்தான். இருப்பினும், அந்தப் போலியான விளம்பரம் எனக்குக் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் கனடா உடன் எந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லை,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.