நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் ஒரு தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகின்றார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் செலுத்தி வருகின்றார்.
அஜித் குமார் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து அஜித்குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார்.
கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார் அஜித். இவர் ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்’ இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றது.
ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
மேலும் தனது காரில் இந்திய சினிமா லோகோவை பொறிக்க உள்ளதாகவும் அஜித் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திரைப்படங்கள் என்றாலும் சரி, கார்பந்தயம் என்றாலும் சரி, எனது கருத்துக்களை ரசிகர்கள் மீது திணிக்க மாட்டேன். அவர்கள் தாங்களாகவே முன்வர வேண்டும் அவர்களுக்கு எல்லா வழிகளிலும் ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்புவதாக அஜித்குமார் தெரிவித்துள்ளார்.