20 3
இந்தியாஇலங்கைசெய்திகள்

சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்

Share

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில் (New York) இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமரன் (Visvanathan Rudrakumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக விசுவநாதன் ருத்ரகுமரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தந்தை பெரியாரையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் எதிர்த்துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் கட்டியமைக்கபடும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தேசியத் தலைவர் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியற் சூழலைக் கடந்து, ஒட்டு மொத்தத் தமிழ்நாடு மக்களும் அரசியற் கட்சிகளும் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்.

நமது விடுதலை இயக்கத்துக்கு கடினமான நேரங்களில் உறுதுணையாக நின்றவர்களுக்கு என்றும் மரியாதையுடன் மதிப்பளித்து வந்தவர்.

தமிழ் உணர்வுடனும் தமிழீழ விடுதலைப் பற்றுடனும் திராவிட இயக்க வழிவந்த தோழர்கள் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பும் பணியும் என்றும் தேசியத் தலைவரதும் தமிழீழ மக்களதும் மனங்களை நெகிழச் செய்தவை.

இத்தகைய நமது சொந்தங்களுக்கு எதிரான தளத்தில் நமது தேசியத் தலைவரை நிறுத்தும் முயற்சியினை சீமான் கைவிட வேண்டும் எனவும் நாம் அவரைக் கோருகிறோம்.

தேசியத் தலைவரால் தனது மாவீரர் நாள் உரைகளிலும் அறிக்கைகளிலும் கடிதங்களிலும் செவ்விகளிலும் அவரால் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் மட்டுமே அவரது கருத்துகளாகக் கருதப்படும்.

இவற்றை விட அவர் சார்பில் கருத்துரைக்கவோ அல்லது அவரது கருத்துகளை தமது அரசியற் தேவைக்கேற்ப வளைத்துத் திரித்துப் பயன்படுத்தவோ எவரும் முனையின் அது அரசியல் அறம் அற்ற ஒரு போக்காகும்.

இத்தகைய அணுகுமுறை தேசியத் தலைவர் கடைப்பிடித்த அறநெறிக்கு முரணானது ஆகும்.

தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினையும் தமிழ்நாட்டு மக்களின் தேசியப்பிரச்சினையும் வேறுபட்டவை, தனித்துவமானவை.

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழ மக்களே தலைமை தாங்க முடியும் தலைமை தாங்க வேண்டும்.

சிங்களத்தின் தமிழின அழிப்பில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாட்டில் இருந்து கட்சி வேறுபாடு கடந்து பரந்து பட்ட ஆதரவைத் தமிழீழ மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளுக்குள் தமிழீழத் தேசியத் தலைவரையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழுத்து விடும் முயற்சிகளை சீமான் உட்பட எந்த அரசியற்கட்சித் தலைவர்களும் மேற்கொள்ளக்கூடாது என்பதே நமது வேண்டுதல்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...