இறக்குமதி அரிசிக்கான சுங்க வரியை குறைக்குமாறு கோரிக்கை
இறக்குமதி அரிசி மீதான சுங்கவரியைக் குறைக்குமாறு வர்த்தகர்கள் பலரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போதைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோவுக்கு 65 ரூபா சுங்க வரியாக விதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் அரிசி கட்டுப்பாட்டு விலையினை தொடர்ந்து பேண முடியுமென வர்த்தகர்களைப் போன்றே நுகர்வோர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
சுமார் 2 மாதங்களாக நிலவி வரும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக அரிசி இறக்குமதிக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 20ஆம் திகதி வரை 67,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி இறக்குமதி மூலம் தற்போதைக்கு 4.3 பில்லியன் ரூபாவை இறக்குமதி வரியாக இலங்கை சுங்கம் அறவீடு செய்துள்ளது.
இறக்குமதி அரிசி மொத்த சந்தைக்கு வந்ததன் பின்னர் நிலவிய அரிசி தட்டுப்பாடு ஓரளவுக்கு தணிந்துள்ள போதிலும், இன்னும் சந்தையில் போதியளவு அரிசி இல்லை என சில பிரதேசங்களில் இருந்து அறியமுடிகிறது.