ரணிலுக்காக அடிவாங்கினோம்: ஆனால் அவர் தற்போது திருப்பி அடிக்கிறார்!
ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் போது 25 வருடங்களாக ரணில் விக்ரமசிங்கவுக்காக நாம் அடி வாங்கினோம். ஆனால் இன்று அவர் எம்மை அடிக்கின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(9) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் கூறுகின்றார். ஆனால் என்ன நடக்கின்றது? ஊழல், மோசடிகள் தொடர்பில் கதைப்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோல நிகழ்நிலை தொடர்பான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கு ஏதுவான வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
பொருளாதாரம் முன்னேறிவருகின்றது ஆனால் மின்கட்டணம் மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
மறுபுறத்தில் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. அண்மையில் நடைபெற்ற போராட்டம் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது.
ரணிலுக்காக நாம் 25 வருடங்களாக அடிவாங்கினோம், இன்று அவர் எம்மை திருப்பி அடிக்கின்றார்.” என குறிப்பிட்டுள்ளார்.