tamilni 125 scaled
இலங்கைசெய்திகள்

வீதிகளில் படுத்துறங்கும் தலைநகரவாசிகள்: வரிப்பணம் எங்கே

Share

Courtesy: uky(ஊகி)

இலங்கையின் தலை நகரான கொழும்பில் நகரின் பரபரப்பான இடங்களில் வீதிகளில் படுத்துறங்கும் மனிதர்களை அவதானிக்க முடிகின்றது.

குளிர் கடுமையாகிக்கொண்டு போகும் இன்றைய காலநிலையில் இரவுப் பொழுதின் ஒய்வுக்கான நித்திரையை இவ்வாறு வீதிகளில் படுத்துறங்குவதனால் பெற்றுக் கொள்கின்றனர்.

இது பொருத்தமற்ற வாழ்கை முறையாக இருப்பது இன்னமும் அங்கே புரிந்து கொள்ளப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குடிமக்களை அடிப்படை வசதிகளோடு வாழவைக்க முடியாத நிலையில் இன்றைய இலங்கை இருக்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகிப் போகின்றதனை நோக்கலாம்.

அதிகாலை வேளையில் இரவுச் சந்தைக்கு பாக்கு வாங்கச் செல்லும் வயோதிபர் ஒருவரிடம் யார் இவர்கள் என வினவிய போது பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். கொழும்பு பழக்கமில்லையா? நீங்கள் கொழும்புக்கு புதுசா? என்ற பதில் கேள்வியோடு பேசத் தொடங்கினார்.

கொழும்பில் கவனமாக இருக்க வேண்டும். யாழ்ப்பாணம் போல நினைக்க வேண்டாம் என மனிதர்களின் செயற்பாடுகளை கருத்திலெடுத்து எச்சரித்திருந்தார். இங்குள்ள சிலரால் உங்கள் பொருட்கள் பறித்துச் செல்லப்படவும் உங்களை ஏமாற்றி விடவும் அதிக வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தைப் போல இல்லை என்றுரைத்ததிலிருந்து இலங்கையின் தலைநகரில் யாழ்ப்பாணத்தில் உள்ளது போல் தனி நபரின் உடைமைக்கான பாதுகாப்பு இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும் என்ற புரிதலை அவரது அந்த பேச்சுக்கள் ஏற்படுத்தியிருந்தன.

வீடுகளில் சண்டையிட்டுக் கொண்டு வந்தவர்களாக இருக்கலாம். வீட்டுக்கு உதவாதவர்களை வீடுகள் வெளியேற்றி விட்டதனால் வந்தவர்களாக இருக்கலாம். கைவிடப்பட்ட அநாதரவான மனிதர்களாகக் கூட இருக்கலாம். வீடுகள் இல்லாதவர்களும் இதில் இருக்கின்றனர் என பல்வகை காரணங்களை அவர் முன்வைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

நகர சுத்திகரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களும் சுமைதூக்கி பிழைக்கும் கூலியாளர்களும் இப்படி வீதியோரங்களில் படுத்துறங்குவதுண்டு என பேருந்து நிலையத்தில் கைப்பேசிகளை விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

யாசித்துப் பிழைப்பவர்கள் தான் இப்படி வீதிகளிலும் பொது இடங்களிலும் படுத்துறங்குகின்றனர். அவர்களுக்கு வீடுகள் இல்லை என மற்றொரு கொழும்பு வாழ் மனிதர் குறிப்பிட்டார். குற்றச் செயல்களோடு தொடர்புடையவர்களும் இவ்வாறு இரவுப் பொழுதில் வீதிகளில் படுத்துறங்கலாம் என முச்சக்கர வண்டி சாரதியொருவர் இதுதொடர்பாக குறிப்பிட்டார். யார் இவர்கள் என்ற தேடலின் பொதுக்கருத்தாக இந்த மனிதர்கள் கவனிப்பாரற்று இருக்கின்ற இலங்கை வயதான குடிமக்கள் என்பது மட்டும் தெளிவானது.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறு வீதிகளில் படுத்துறங்கும் மனிதர்களை காண முடியவில்லை. அப்படியொரு நிகழ்வு நடந்தால் இளைஞர்கள் தலையிட்டு அவர்கள் யார் என தேடி காப்பகங்களிலாவது கொண்டு சேர்ப்பார்கள்.

அந்த பண்பாட்டை கொழும்பில் அவதானிக்க முடியவில்லை என சமூக விடய ஆய்வாளர் ஒருவரிடம் இது தொடர்பாக அவரது கருத்துக்களைக் கேட்ட போது விளக்கியிருந்தார்.

அதிக மக்கள் வந்து போகும் இடம். அதிகமான மக்கள் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தலைநகரில் இந்த விடயம் பரபரப்பான தலைநகரில் வாழும் மனிதர்களுக்கு தெரியவில்லை.

அவர்கள் தங்கள் செயற்பாடுகளுக்காக அதிக முன்னுரிமை கொடுத்து செயற்படுகின்றனர். “எதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறதோ அது முதலில் நடைபெறும்.”என்றார்.

வீதிகளில் படுத்துறங்கும் மனிதர்களை அவர்கள் உண்டு உறங்கி உழைத்து பிழைப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இப்போதுள்ள சூழலில் அவர்கள் உண்டு உறங்குவதற்கென ஒரு இடத்தினை ஏற்பாடு செய்து கொடுப்பதோடு வீதிகளிலோ பொது இடங்களிலோ இவ்வாறு அநாதரவாக படுத்துறங்க வேண்டாம் என நிர்ப்பந்திக்கலாம். அவ்வாறான ஒழுங்குபடுத்தலும் நிர்ப்பந்தமும் தலைநகரில் மனக்கவலையை ஏற்படுத்தும் இத்தகைய நிகழ்வுகளை படிப்படியாக இல்லாமல் செய்துவிடும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெவ்வேறு நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் இலங்கையின் தலைநகரினூடாகவே இலங்கையை சுற்றிப்பார்த்து போகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் அரசாங்கம் தலைநகரில் அவர்களுக்கு மனவுழைச்சலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை களைவதில் அக்கறை காட்டுவது மிகக் குறைவாக இருக்கின்றது.

இலங்கைக்கு வந்து போகும் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் நல்ல மனநிறைவோடு போக வேண்டுமானால் இலங்கையர்களின் துயரங்களை கண்ணுற்றுக் கொள்ளாதவர்களாகவே இருக்க வேண்டும். மனிதாபிமானமுள்ள பயணிகளுக்கும் அவர்களுடன் வந்து செல்லும் சிறார்களுக்கும் யாசகர்களினதும் வீதிகளில் படுத்துறங்கும் மனிதர்களதும் கோலங்கள் அவர்களது இக்கட்டான நிலை மனப் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம் என உளவள ஆலோசனையாளர் ஒருவர் இது தொடர்பாக கருதுரைக்கும் போது குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.

சுற்றுலா வருமானம், மக்களால் செலுத்தப்படும் வரிப்பணம் என்பவற்றின் மூலம் இந்த துர்ப்பாக்கிய நிகழ்வை இல்லாதொழிக்க முடியும் என கருத்துத் தெரிவிக்கும் மக்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...