டுபாயில் தலைமறைவாகியுள்ள மிகப்பெரிய போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக், தெஹிவளையில் பாரிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை கடற்கரையோரத்தில் பிரபல ஆசிரியர் ஒருவரின் பெயரில் இந்த ஹோட்டல் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தெஹிவளை கடற்கரையில் வேறு ஒருவரின் பெயரில் நடத்தப்படும் ஹோட்டல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் குறித்த ஹோட்டல் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களத்தின் இயக்குநர் ஜெனரல் ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த ஹோட்டலின் உரிமையாளர் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஹோட்டல் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமான கட்டுமானம் என முதன்முறையாக அடையாளம் காணப்பட்டபோது, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் கூறியுள்ளது.
ஏற்கனவே நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டல் கட்டுவதற்கு சமர்பிக்கப்பட்ட ஆவணம் போலியானது என பண மோசடியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், தற்போதுள்ள சட்ட விதிளுக்கமைய, ஹோட்டலை பறிமுதல் செய்யவோ அல்லது இடிப்பதற்கோ கடலோர கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.