இஸ்ரேல் – ஹமாஸ் போரினை அடுத்து ராணுவத்தில் இணைய மறுத்த 18 வயது இளைஞரை இஸ்ரேல் நிர்வாகம் ராணுவ சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர், அரசியல் காரணங்களுக்காக ராணுவ சேவையை மறுத்ததற்காக கைது செய்யப்பட்ட முதல் நபர் தால் மிட்னிக் என்றே கூறப்படுகிறது.
அவருக்கு செவ்வாய்க்கிழமை ராணுவ சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கட்டாய ராணுவ சேவையை மறுப்பதை ஊக்குவிக்கும் அமைப்பான Mesarvot-ன் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் தால் மிட்னிக் குறிப்பிடுகையில்,
படுகொலைக்கு படுகொலையால் தீர்வு காண முடியாது என்று நான் நம்புகிறேன் என பதிவு செய்துள்ளார். மேலும், காஸா மீதான சட்டத்திற்குபுறம்பான தாக்குதல் ஹமாஸ் நடத்திய கொடூரமான படுகொலைக்கு தீர்வாகாது.
வன்முறை வன்முறையைத் தீர்க்காது. அதனால்தான் நான் மறுக்கிறேன் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அவர் மத்திய இஸ்ரேலில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளார். பொதுவாக இஸ்ரேல் ராணுவ சேவையை மறுப்பது என்பது சட்டத்தின் படி குற்றமாகும்.
ஆனால் பலர் உடல் தகுதி மற்றும் உளவியல் காரணங்களை சமர்ப்பித்து, கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பி வருகின்றனர்.
தால் மிட்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸ் தாக்குதல் கொடூரம் என்றால், இஸ்ரேலின் பழி வாங்கும் நடவடிக்கையும் அதை விட கொடூரம்.
ஹமாஸ் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்கள் மீதும் இஸ்ரேல் தனது கொடூர முகத்தை வெளிக்காட்டுவதாக தால் மிட்னிக் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வன்முறை பாதுகாப்பைக் கொண்டுவரும் என்பதை நம்ப மறுப்பதாக கூறும் தால் மிட்னிக், பழிவாங்கும் போரில் பங்கேற்க விரும்பவில்லை என துணிவுடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 30 நட்கள் தண்டனைக்கு பின்னரும் தால் மிட்னிக் ராணுவ சேவைக்க் மறுப்பு தெரிவித்தால், தண்டனை காலம் நீளலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.