அவுஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்.

Bird flu

 

தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் கடற்கரை பகுதிக்கு அருகில் முதன்முறையாக 50க்கும் மேற்பட்ட கடற்பறவைகள் உயிரிழந்ததை அடுத்து, அங்கு ‘எச்5என்1’ (H5N1) பறவைக் காய்ச்சல் நோய் மேலும் வேகமாகப் பரவக்கூடும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

அடிலெய்ட் பகுதிக்கு தெற்கே உள்ள கேப் ஜாஃபா பாறைப் பகுதிகளில் 49 இறந்த பறவைகளும், 35 நோய்வாய்ப்பட்ட பறவைகளும் இனங்காணப்பட்டுள்ளன.

அவற்றுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய விவசாயத் துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், இதுவரை பண்ணைப் பறவைகளிடம் இந்த வைரஸ் பரவவில்லை என்றும், ஜூன் மாதம் முதல் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உலக அளவில் மில்லியன் கணக்கான பறவைகளும் பாலூட்டிகளும் இந்த நோயால் உயிரிழந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா இதுவரை இந்த வைரஸால் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருந்தது.

எச்5என்1 வைரஸ் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் மிகவும் குறைவு என்றாலும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

Exit mobile version