தையிட்டியில் பதற்றம்: விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் போராட்டம் – பொலிஸார் குவிப்பு!

20230504 Point Pedro Protesting removal of temple 2

சட்டவிரோதமாகத் தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக, இன்று (சனிக்கிழமை) காலை முதல் காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது பாரம்பரியத் தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும், அங்கு சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.

இன்றைய பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு, சிகிரியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய புத்தர் சிலை ஒன்றினை விகாரையில் நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்றைய போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

போராட்டம் காரணமாக அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதைத் தொடர்ந்து, பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டுக் குவிக்கப்பட்டுள்ளனர். விகாரைக்கான நுழைவுப் பாதைகள் மற்றும் போராட்டப் பகுதிகளைச் சூழப் பொலிஸார் பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளனர்.

தையிட்டி பகுதியில் வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், அங்கு திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்பட்டமைக்குத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version