வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுத் தொன்மை மிக்க வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான ஒரு ஏக்கர் காணி மற்றும் செல்வதற்கான பாதையை விடுவித்துத் தருமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இன்று (05.01.2026) ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்:
ஆலயத்தின் வழிபாட்டுச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியை ஆலய அறங்காவலர் சபையிடம் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலயத்திற்குச் செல்லும் பாதையை வவுனியா வடக்கு பிரதேச சபையிடம் ஒப்படைக்கும் பட்சத்தில், அதனைத் தாம் புனரமைத்துத் தரத் தயாராக இருப்பதாகப் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆலய அறங்காவலர் சபையினர் ஏற்கனவே ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும் இதுவரை திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. எனவே, ஆளுநர் இதில் நேரடியாகத் தலையிட்டு விரைவான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதில் இருந்து, அங்கு வழிபாடுகளை மேற்கொள்வதிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் நீண்டகாலமாக இழுபறி நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

