காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

articles2FyEG6lrLYMw8L60exw5pH

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 8) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மலையக மக்களுக்குக் காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமே வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனக் கோரிக்கை விடுத்தார்.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை மாற்றத்தினால் உயிரிழந்த நுவரெலியா மாவட்டச் சொந்தங்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உரிய வழிமுறை பிறக்கும்.

“மலையகத்தில் பெரும் பிரச்சினை ஒன்று உள்ளது. அதாவது, தோட்டத்தில் வேலை செய்தால் தான் அடையாளம், சலுகைகள் கிடைக்கப் பெறுகின்றன. தோட்டத்தில் வேலை செய்யாத ஏனையோருக்கு எவ்வித அதிகாரமும் கிடைக்கப்பெறவில்லை. இந்த முறைமை மாற வேண்டும்.”

பெருந்தோட்டப் பகுதிகளில் ஒன்றரை லட்சம் வீடுகள் தேவைப்படுகின்றன. பாதீட்டு ஒதுக்கீட்டின் பிரகாரம் வருடமொன்றுக்கு 2 ஆயிரம் வீடுகளை அமைத்தாலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

மக்களுக்கு வாழ்வதற்குரிய காணி உரிமையை வழங்கினால், வீடில்லாப் பிரச்சினையைத் தீர்க்க வழி பிறக்கும்.

மக்களுக்கு வழங்குவதற்கு உரிய காணி வளம் உள்ளது. மக்கள் தற்போது வாழும் லயன் அறைகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை வழங்கினாலேயே அவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்ள முடியும். 2024 இல் நிறைவேற்றப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை அமல்படுத்தலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜீவன் தொண்டமானின் கோரிக்கைக்குப் பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பின்வருமாறு தெரிவித்தார்.

தற்போது பேரிடர் நிலையால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசப்படும்.

“ஒருவருக்கு 6 பேர்ச்சஸ் என வைத்தாலும், ஒன்றரை லட்சம் பேருக்கு 9 லட்சம் பேர்ச்சஸ் காணி தேவைப்படும். இதை எவ்வாறு பெற்றுக்கொள்வது, தொழில்நுட்பக் காரணி, பாதுகாப்பான இடம் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உங்களை (மலையகப் பிரதிநிதிகளை) சந்தித்துக் கலந்துரையாட உள்ளேன்.”

தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை அமைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிப்போம்.

Exit mobile version