புதிய நாடாளுமன்ற சபாநாயகராக அசோக ரங்வல நியமனம்
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வை மிகவும் எளிய முறையில் நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமையின் பெயரில் அமைதியான முறையில் அனைத்து நடவடிக்கைகளும் முனெ்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்படும் எனவும் இதனை தொடர்ந்து தேநீர் உபசார விருந்து இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போது நாடாளுமன்றத்திற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ள நிலையில் முதலில் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், இன்று பிற்பகல் புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, இதன்போது சுமார் 27 பேர் பிரதி அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புதிதாக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தை பார்வையிடவும் இன்றையதினம் (21) முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவும் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.