இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது வாகனங்களின் விலைகளும் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (நவம்பர் 26) முற்பகல் மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இந்த முக்கிய விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
டொலர் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இந்த ஆண்டின் இறுதியில் நாட்டில் அதிகபட்ச டொலர் கையிருப்பு பதிவாகும் என எதிர்பார்ப்பதாக ஆளுநர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதிவசதியின் (EFF) கீழான ஐந்தாவது தவணைக் கடன் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி அங்கீகரிக்கப்படும் என நம்பப்படுகின்றது.
அதன்பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி (World Bank) ஆகியவற்றிலிருந்தும் டிசம்பர் மாதம் நிதி உதவி கிடைக்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வருட இறுதிக்குள் வெளிநாட்டுப் பண அனுப்பல்கள் மற்றும் சுற்றுலா வருமானம் ஆகியவையும் உயரும் என்பதால், உரிய பொருளாதார இலக்கை அடைய முடியும் என்றும் அவர் மேலும் விளக்கினார்.