சாப்பிடுவதற்கு முன், பின் – தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்?

water

ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியமானதோ அப்படித்தான் எந்த நேரத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலிலுள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகிறது, மற்றும் இது ஊட்டச்சத்துக்களை உடலின் அனைத்து பாகங்களுக்கும் கடத்தி சென்று உடலை சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது.

அதுவே நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உங்களுக்கு நீரிழப்பு, உடல் சோர்வு, தலைவலி, மலசிக்கல், சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மூட்டு மற்றும் தசைப் பிரச்சனைகள் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். ஆயுர்வேதத்தின்படி தண்ணீர் எப்போது? எவ்வளவு? குடிக்க வேண்டும் என்கிற விதிமுறைகளும் உள்ளது.

ஆயுர்வேதத்தின்படி, உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அல்லது உங்கள் உணவு உண்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது என்று கூறப்படுகிறது. ஒல்லியாக இருப்பவர்கள், உடல் எடை அதிகரிக்க முயற்சிப்பவர்கள் உணவு உண்ட 30 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், உடல் பருமனாக இருப்பவர்கள் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. ஆனால் சிலர் மருத்துவர்கள் உணவுக்கு முன் தண்ணீர் குடித்தால் செரிமான கோளாறு ஏற்படும் என்றும், உணவுக்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு மிக குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

உணவுடன் சேர்த்து தண்ணீர் குடிக்கக்கூடாது, உணவுடன் ஒரு கிளாஸ் அல்லது அதற்கு மேல் தண்ணீர் குடித்தால் நமது ஜீரண திறனில் பாதிப்பு ஏற்படுகிறது மற்றும் இன்சுலினின் அளவிலும் மாறுபாடு ஏற்படும், உணவு சாப்பிடும்போது தேவைப்படும் பட்சத்தில் மட்டும் சிறிது தண்ணீர் குடிக்கலாம் மற்றபடி உணவு சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் நல்லது. எப்போதும் உணவு உண்ட ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது சிறந்தது என்று கூறப்படுகிறது, ஏனெனில் இதன் மூலம் உணவில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சிக்கொள்ளும். மேலும் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், மேலும் சோர்வாக உணரும்போது தண்ணீர் குடித்தால் புத்துணர்வு கிடைக்கும்.

#LifeStyle

Exit mobile version